Tamil Books

Tamil Books Cash on delivery.

19/11/2020
19/11/2020
நீண்ட காத்திருப்பு858 RS.பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை ம...
19/11/2020

நீண்ட காத்திருப்பு
858 RS.

பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் "சாகரவர்த்தனா" கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜித் போயகோட, ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார். போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற தன்வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது வெளிவந்திருக்கிறது.

யுத்த களத்தில் எதிரிகளால் பிடிக்கப்பட்டு பின்னர் உயிர் மீண்டவர்களின் கதைகள் அனைத்தும் சாவை சுவைத்து திரும்பியவர்களின் கதைகள்தான். உலகப்போர் முடிந்த பின்னர் எழுதப்பட்ட இவ்வாறான பல கதைச்சேகரங்கள் பல்வேறு புத்தகங்களாக பல மொழிகளில் வெளிவந்திருக்கின்றன. பலர் இந்தக்கதைகளை வரலாற்றுக்கான ஆவணங்களாக எழுதிச்சென்றிருக்கிறார்கள். பலர் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் எழுதிக்கடந்து செல்ல முயற்சித்திருக்கிறார்கள். இன்னும்பலர், வரலாற்றில் தம் மீதான பழியொருபோதும் எழுதப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தாங்களே அந்த வரலாற்றை எழுதிவிட்டுச்சென்றுள்ளார்கள்.

கடலில் வைத்து கைதுசெய்யப்பட்ட அஜித் போயகொட புலிகளுடன் இணைந்து செயற்படுகிறார் என்று சிங்களபடைத்தரப்பில் மாத்திரமல்லாது ஊடகங்களின் வாயிலாக மக்கள் மத்தியிலும் பிரச்சாரப்படுத்தப்பட்டு உண்மையாக்கப்பட்டிருந்த நிலையில், ஏழு வருடங்களின் பின்னர் தென்னிலங்கை திரும்பும் அஜித் முகங்கொடுக்கின்ற மிகப்பெரிய மன உளைச்சலின் விளைவாகவே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், தனக்கு வெள்ளையடித்து காண்பிக்கவேண்டும் என்பதற்காக தான் கைதுசெய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் அனுபவித்த உண்மைகளை இயன்றளவு மறைக்காமல் எழுதியிருப்பது இந்த நூலுக்கு ஒரு பெறுமதியை கொடுக்கிறது.

மாலுமிகள் நித்திரைகொண்டிருந்தபோது கடற்புலிகள் தாக்கி மூழ்கடித்த கப்பலில் இருந்து பாய்ந்து, கடலில் மிதந்துகொண்டிருந்த தன்னை பிடித்துக்கொண்டு கரைக்கு கொண்டுபோனபோது, சூசை வந்து அடையாளம் காணுவதிலிருந்து -

கிளாலி வழியாக யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு கொக்குவில், மானிப்பாய், நல்லூர், மிருசுவில், வன்னி என்று 94 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை - புலிகள் இராணுவ ரீதியாக எழுச்சிகொண்டுவந்த முழுக்காலப்பகுதியிலும் - அவர்களோடு ஒரு கைதியாக பயணிக்கிறார் அஜித் போயகொட.

இவர் உட்பட கைதுசெய்யபட்ட ஏனையவர்களுக்கும் சசிக்குமார் மாஸ்டரின் முதல் நியூட்டன்வரை பொறுப்பாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடனான அனுபவங்கள், பொதுவாக விடுதலைப்புலிகள் இயக்கம் எப்படி இயங்கியது, அவர்கள் கைதிகளை எப்படி நடத்தினார்கள், போர் குறித்தும் தமிழீழம் குறித்தும் அவர்களது பார்வை எப்படியாக இருந்தது என்பவை குறித்தெல்லாம் ஒரு படைத்துறை அதிகாரியாகவும் ஒரு சிங்களதேசத்தவராகவும் தனது பார்வையை முன்வைக்கிறார் போயகொட.

இந்தப்பார்வை தென்னிலங்கையில் தனக்கு மேலும் பழியை கொண்டுவரும் என்ற இரண்டாம் சிந்தனைக்குள் நின்று தன்னை சுதாரித்துக்கொள்ளாமல், தனது உணர்வுகளுக்கு நேர்மையாக சம்பவங்களை பதிவுசெய்திருக்கிறார்.

எல்லாவற்றையும் மீறி சுனாமி காலப்பகுதியில் மீண்;டும் வன்னி செல்கிறார். ஜோர்ஜ் மாஸ்டரின் மனைவி இறந்த செய்தியைக்கேட்டு நேரில் சென்று அவரை பார்க்கிறார். தென்னிலங்கையில் போகுமிடமெல்லாம் பெரும் தலைகுனிவை எதிர்கொண்டு விரக்தியோடு வாழுந்துகொண்டு, வெளியில் வந்த பின்னர், தனது இரண்டாவது மகனை விபத்தில் பறிகொடுக்கும் போயகொ, வன்னிக்கு மீண்டும் வரும்போது காண்பிக்கும் உணர்ச்சிப்பெருக்கு மனசாட்சியின் மீது என்று அவரை பேசவைக்கிறது.

மனம் பொருமிய இடங்களில் வன்மத்தை துப்பவும் அஜித் தவறவில்லை. அதுபோல, போர் முடிந்த பின்னர் தன்னை கனடாவிலிருநு;து தொடர்புகொண்ட ஒப்பிலான் தன்னை சுகம் விசாரித்ததாக கூறிவிட்டு, தான் புலிகள் அமைப்பிலிருக்கும்போதே றோவுடன் வேலை செய்ததாக ஒப்பிலான் தனக்கு கூறியதாக அஜித் எழுதியிருக்கிறார். இப்படியான இடங்கள்தான் இந்தப்பிரதியை எந்த இடத்தில் வைத்து வாசிப்பது என்ற குழப்பம் வருகிறது. ஏனெனில், புலிகளின் தடுப்பிலிருந்த ஏழுவருட காலத்தில் தான் எந்த தகவலையும் அவர்களுக்கு சொல்லவில்லை. தாய்நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை என்று புத்தகம் முழுவதும் கூறுகின்ற இவர், வெளியில் வந்தபிறகு புலிகள் அமைப்பில் தான் சந்தித்த நல்லவர்கள் என்ற பட்டியலில் வைத்திருந்த ஒப்பிலான் றோவில் பணிபுரிந்தவராம் என்று போற போக்கில் அடித்துவிட்டுப்போய்விடுகிறார். அவரைப்பொறுத்தவரை அது உண்மையாகவே இருந்திருந்தாலும், இப்படிப்பட்டவர் உள்ளே இருந்தபோது ஒரு தகவலையும் சொல்லியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஈழத்து போரிலக்கிய பிரதிகளில் - போர் முடிந்த பின்னர் வெளிவந்த நூல்களில் - "நீண்ட காத்திருப்பு" முக்கியமானது. வரலாற்றின் மீதான சமாந்தரமான பார்வை என்பதற்கு அப்பால், புலிகளுக்குள்ளிருந்த எதிராளி ஒருவர் எழுதிய இந்தப்போர்க்குறிப்புக்கு அதிக கனதி உண்டு. தமிழரின் போருக்கான நியாயங்களும் உண்டு.

"நீண்ட காத்திருப்பு" - நிச்சயம் படிக்கவேண்டிய நூல். வெளிக்கொண்டுவந்த 'வடலி' பதிப்பகத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

Address

Jaffna

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category