16/08/2020
*சின்ன அரயத்தி*
(சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி விருதுகள் பெற்ற நாவல்)
வகைமை: #நாவல் #விளிம்புநிலை_மக்கள்
ஆசிரியர்: நாராயணன்
பதிப்பகம்: காலச்சுவடு
பக்கங்கள்: 280
விலை *₹250*
*கிடைக்குமிடம்:*
ஸஃபிய்யா டிரேடர்ஸ், புத்தன்குடியிருப்பு, பறக்கை ரோடு, கோட்டார் போஸ்ட், நாகர்கோவில்.
அலைபேசி: 9500827859/9629554621/9790411844
E-mail: [email protected].
*Facebook:* https://m.facebook.com/safiyyatradersgeneralbooks/?tsid=0.014401352812437596&source=result
*Join us in Telegram:*
https://t.me/safiyya_traders_book_store
கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது.
இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிக சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும் அளிக்கிறது.
சாகித்திய அக்காதெமி, கேரள சாகித்திய அக்காதெமி பரிசுகளைப் பெற்ற நாவலின் தமிழாக்கம்.
*** ★ ***
கேரள சாகித்ய அகாதமி விருதுபெற்ற *கொச்சரயத்தி* என்னும் நாவல், கேரளத்தின் ஆதிவாசி சமூகத்தை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும்.
‘ஆதிவாசி இலக்கியத்தில் தலித்திய பார்வை’ என்ற தலைப்பில் பி.கே.போக்கர் 'தேசாபிமானி’ வார இதழில் எழுதிய கட்டுரை இந்நூலின் முன்னுரையாக அமைந்துள்ளது.
ஆதிவாசிகள் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் பி.கே.போக்கர், “கேரளத்தைப் பொறுத்தமட்டில் மலையாளிகளின் தனித்துவ உணர்வுகளிலிருந்து அன்னியப்பட்ட ஒரு மக்கள் பிரிவினர் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆதிவாசிகள் சமூகம். அவர்களது வாழ்க்கையும் மொழியும் இன்றும் வேறுபட்டு நிற்பது மட்டுமல்ல, அவற்றுக்கேயான தனித்துவ அழகையும் கொண்டிருக்கின்றன.
ஆதிவாசிகளின் வாழ்க்கையும் அனுபவங்களும் மேன்மைகளும் வித்தியாசமானவை மட்டுமல்ல, இயற்கையின் பேரிடர்களையும் அது எதிர்கொள்கிறது” என்கிறார்.
இந்நாவலில், ஆதிவாசி மலையரையச் சமூக மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை முறைகள், அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள், சுரண்டல்கள், அவர்கள் நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல் என அனைத்தையும் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர்.
“நூறு வருடங்களுக்கு முன் கேரளீய சமூகம் நுழைந்த நவீன வாழ்க்கைச் சூழலுக்கு ஆதிவாசிகள் சமூகம் நுழையத் துவங்கும்போது ஏற்படுகிற உத்வேகமான நிகழ்வுகள்தான் நாவலில் வெளிப்படையாகவும் உள்ளடங்கியும் தென்படுகின்றன” என்கிறார் பி.கே.போக்கர்.
இயற்கையுடன் ஒன்றி வாழும் ஆதிவாசிகள் சமூகம் அதோடு போராடுவதும் இயற்கையை வென்று வாழும் மக்களுக்கு மனிதர்களே எதிரிகளாக வருவதும் தங்கள் சமூகத்தைத் தவிர எந்த மக்களுடனும் அவர்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாததும் அதற்குக் காரணமாகத் தங்களைப் பிறர் ஏமாற்றிவிடுவார்களோ என்ற பயமும் சாதி சமய நம்பிக்கைகளிலிருந்து விலக மறுப்பதும் நவீனத்துவத்தைக் கண்டு தயங்குவதும் என்று இந்நாவல் முழுதும் மலையரையர்களைக் குறித்த பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன.
ஒதுக்கப்பட்ட மக்களாகப் பார்க்கப்படுகின்ற ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்த மக்கள் இயற்கை, நோய் இவற்றை வென்று வாழ்ந்தாலும் உயர்சாதி மனிதர்கள், அதிகாரிகள், சட்டங்கள், வியாபாரிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரால் அனுபவிக்கும் துன்பங்கள் ஏராளம்.
இம்மக்களைத் தங்கள் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் எவரும் மனிதர்கள் என்ற அங்கீகாரத்தைக்கூட இவர்களுக்குத் தர மறுக்கின்றனர்.
ஆதிவாசி சமூகம் தங்கள் பழைய நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் குலைத்து நவீனத்துவத்துக்கு ஆட்பட முயலும்போதும் ஆட்படும்போதும் எந்தெந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை அந்தச் சமூகத்திலிருந்து வந்த, அந்தச் சூழ்நிலைகளை எதிர்கொண்ட எழுத்தாளர் என்ற நிலையில் அவரால் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்நாவலை ஒரு முற்போக்கு இலக்கியம் என்று கூறுவது முற்றிலும் தகும்.