10/04/2023
https://m.facebook.com/story.php?story_fbid=147203134964327&id=100090239244165&mibextid=Nif5oz
றமளான் மாதம் நிகழ்ந்த, முஸ்லிம்கள் பெருவெற்றி பெற்ற போர்களில் ஐன் ஜாலூத் போர் (Battle of Ain Jalut) மிக முக்கியமானதாகும்.
இந்தப் போர் 25 றமளான் ஹி.658 (3 September 1260) அன்று தாத்தாரியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் நடைபெற்றது.
"வெல்ல முடியாத பேராற்றல்" எனத் தாத்தாரியர்கள் குறித்து மக்கள் கொண்டிருந்த "தெய்வீகப் பிம்பம்" இந்தப் போரில் நொறுங்கித் தவிடுபொடியானது.
செங்கிஸ்கானின் பேரர் ஹுலகு கானின் படை இந்தப் போரில் படுதோல்வி கண்டது!
உடல் வலிமையைவிட உளவலிமையும் அல்லாஹ்வுடனான வலுவான தொடர்பும் அங்கு மிகைத்தன. நோன்பாளிகளான முஸ்லிம் மறவர்களுக்கு அல்லாஹ் தனது ஆற்றலால் அங்கு பெருவெற்றியை அளித்தான்.
**** **** ****
தாத்தாரியர்கள் ஷாமை வெற்றி கொண்ட பிறகு எகிப்தை நோக்கித் திரும்பினார்கள். அந்தச் சமயத்தில் எகிப்து மட்டும்தான் தாத்தாரியர்களின் தாக்குதலுக்கு இலக்காகாத ஒரு பிரதேசமாக இருந்தது.
எகிப்தின் அரசர் முளஃப்பர் சைஃபுத்தீன் குத்தூஸ் தாத்தாரியர்கள் ஷாமை வெற்றி கொண்ட பிறகு எகிப்தை நோக்கித்தான் வருவார்கள் என்பதையும், அப்படியே அவர்கள் படையெடுத்து வந்துவிட்டால் அவர்களிடமிருந்து தப்புவது கடினமாகிவிடும் என்பதையும் தமது சாதுரியத்தால் ஊகித்து அறிந்துகொண்டார்.
ஆகவே எகிப்திலிருந்து படைகளோடு ஷாமுக்குச் சென்று அவர்களைத் தாக்க வேண்டும் என அவர் முடிவுசெய்துகொண்டார்.
இறுதியில் ஹிஜ்ரீ 658ஆம் ஆண்டு றமளான் மாதம் 25ம் நாள் எகிப்தின் இஸ்லாமியப் படைகளுக்கும் தாத்தாரியப் படைகளுக்கும் மத்தியில் ஐன் ஜாலூத் என்ற இடத்தில் உக்கிரமான போர் நடைபெற்றது.
தாத்தாரியர்கள் தங்களின் முந்தைய போர்களில் அல்லாமல் அந்தப் போரில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவினார்கள்.
அவர்கள் அங்கிருந்து பின்வாங்கி ஓடினார்கள். எகிப்தின் படைகள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அவர்களில் பலரைக் கொன்றது; பலரைக் கைதிகளாகப் பிடித்தது.
பேரறிஞர் சுயூத்தீ தமது ‘தாரீஃகுல் ஃகுலஃபா’ என்ற நூலில் கூறுகிறார்:
"தாத்தாரியர்கள் மிக மோசமான தோல்வியைத் தழுவினார்கள். முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். தாத்தாரியர்கள் மிக அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்டார்கள். அவர்கள் புறங்காட்டி ஓடினார்கள். அவர்களின் விசயத்தில் மக்களின் பேராசை அதிகரித்தது. அவர்கள் தாத்தாரியர்களைப் பிடித்து அவர்களிடம் உள்ள எல்லாவற்றையும் பிடுங்கத் தொடங்கினார்கள்."