14/07/2026
🔥 அடுத்த 25 ஆண்டுகளுக்கு நான் தான் வேலூருக்கே ராஜா! தவெக எம்.எல்.ஏ வினோத் கண்ணன் மிரட்டல் பேச்சு
K24 Tamil News
வேலூர், ஜூன் 24-
தமிழக அரசியலில் ஒரு தூய்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு, மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் தளபதி விஜய். ஆனால், தலைவரின் உன்னத எண்ணங்களுக்கும், கழகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும் முற்றிலும் மாறாக, வேலூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வினோத் கண்ணன் தார்மீக நெறிகளைத் தூக்கி எறிந்து விட்டு, ரவுடி பாணியில் சொந்தக் கட்சியினரையே மிரட்டி வருவதாக, தவெக அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 "நான்தான் ராஜா..!" - வேலூரில் அரங்கேறும் தவெக எம்.எல்.ஏ-வின் மிரட்டல் அரசியல்:
வேலூர் தொகுதியில் தவெக பெற்ற மாபெரும் வெற்றி என்பது, வேட்பாளரின் தனிப்பட்ட தகுதியால் கிடைத்தது அல்ல; ஒட்டுமொத்தப் பொதுமக்களும், ரசிகர்களும் தலைவர் விஜய் மீது வைத்த விசுவாசத்தால் மட்டுமே சாத்தியமானது.
ஆனால், மக்கள் கொடுத்த அங்கீகாரத்தை வைத்துக் கொண்டு வினோத் கண்ணன் தற்பொழுது ஆடியன்ஸ் மற்றும் தொண்டர்களிடம் காட்டி வரும் மிரட்டல் தோரணை உள்கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
🔥 விரைவில் அமைச்சர்! :
“அடுத்த 25 ஆண்டுகளுக்கு நான் தான் வேலூருக்கே ராஜா! விரைவில் நான் அமைச்சராகவும் போகிறேன், கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் எனக்குத்தான் வரப்போகிறது. அதனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரும் எனக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும்; இல்லையென்றால் அடையாளம் தெரியாமல் ஒழித்துக் கட்டிவிடுவேன்” என்று வினோத் கண்ணன் கொக்கரித்துப் பேசியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
கட்சியில் இணைந்து வெறும் ஒரே ஒரு ஆண்டு மட்டுமே ஆன ஒரு நபர், அதற்குள்ளாக வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்தக் கட்சியினரையும், நிர்வாகிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் அடக்கி ஆள நினைக்கும் இந்த சர்வாதிகார மனப்போக்கு தவெக-வின் மூத்த நிர்வாகிகளை மிரளச் செய்துள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினரே, எவ்வித ஜனநாயகப் பண்புகளுமற்று சகக் கட்சியினரை நோக்கி இத்தகைய ரவுடி பாணியில் மிரட்டல் தொனியில் பேசியிருப்பது வேலூர் தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், உள்கட்சிப் பூசலையும் ஏற்படுத்தியுள்ளது.
🔥 பல ஆண்டுகால உழைப்பு பலியா? - தொண்டர்கள் குமுறல்! :
இந்த விவகாரத்தில் வேலூர் மாவட்டத் தவெக விசுவாசிகள் எழுப்பும் மிக நியாயமான கேள்வி என்னவென்றால், வினோத் கண்ணன் கட்சியில் இணைந்து வெறும் ஒரு ஆண்டு காலம் தான் ஆகிறது. ஆனால், தவெக தலைவர் தளபதி விஜய் அவர்களின் மீதுள்ள ஈர்ப்பால், கடந்த 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது குடும்பம், தொழில் என அனைத்தையும் பாராமல், ரசிகர் மன்றக் காலத்திலிருந்தே உழைத்து, இன்று கட்சி வரை பாடுபட்ட எத்தனையோ விசுவாசமான தொண்டர்கள் வேலூரில் இருக்கிறார்கள்.
"கட்சியில் இணைந்து ஒரு வருடமே ஆன ஒரு நபர், எம்.எல்.ஏ என்ற மிரட்டல் பதவியைப் பயன்படுத்தி, பல ஆண்டுகளாக ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்த மூத்த தொண்டர்களைப் புறந்தள்ளிவிட்டு, 'அடையாளம் தெரியாமல் ஒழித்துவிடுவேன்' என்று ரவுடி பாணியில் மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்?" என்று உண்மையான உடன்பிறப்புகள் ஆவேசத்தோடு கேள்வி எழுப்புகின்றனர்.
வேலூரில் ஸ்ரீ நாராயணி அம்மா அவர்களின் பின்புலத்தைத் பலமாக கொண்டு, தனக்குச் சாதகமாகக் காட்டி, உள்கட்சி ஒற்றுமையைக் குலைக்கும் இத்தகைய செயல்பாடுகள், தூய்மையான அரசியல் செய்ய நினைக்கும் தலைவர் முதல்வர் விஜயின் எண்ணத்திற்குப் பின்னால் இருந்து குத்தப்படும் முதுகெலும்பு முறிவாகவே பார்க்கப்படுகிறது.
🔥 ‘களை’ எடுக்குமா தலைமை? :
தொண்டர்களை மதிக்காமல், தானே வேலூரின் ஏகபோக ராஜா என்று வலம் வரும் எம்எல்ஏ வினோத் கண்ணன் மீது வேலூர் பொதுமக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் நாளுக்கு நாள் கடுமையான எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால், உள்கட்சிப் பூசலால் வீழ்ந்த பிற கட்சிகளின் கதி தான் தவெக-விற்கும் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, கழகத் தலைவர் முதல்வர் விஜய் அவர்களும், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களும், வினோத் கண்ணனின் இந்த அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் ரவுடித்தனமான மிரட்டல் லீலைகளை ஆரம்ப நிலையிலேயே விசாரணை செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், விசுவாசத் தொண்டர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, தவறிழைக்கும் இத்தகைய நபர்களை உடனடியாகக் களை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்டத் தவெக விசுவாசிகள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.